சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

Back to Top
சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
12.010   தில்லை வாழ் அந்தணர்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

12.010 தில்லை வாழ் அந்தணர்   ( )
ஆதியாய் நடுவு மாகி
அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித்
தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப்
பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப்
பொதுநடம் போற்றி போற்றி.
[1]
கற்பனை கடந்த சோதி
கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந் 
திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
பூங்கழல் போற்றி போற்றி.

[2]
போற்றிநீள் தில்லை வாழந்
தணர்திறம் புகல லுற்றேன்
நீற்றினால் நிறைந்த கோல
நிருத்தனுக் குரிய தொண்டாம்
பேற்றினார் பெருமைக் கெல்லை 
யாயினார் பேணி வாழும்
ஆற்றினார் பெருகும் அன்பால்
அடித்தவம் புரிந்து வாழ்வார்.
[3]
பொங்கிய திருவில் நீடும்
பொற்புடைப் பணிக ளேந்தி
மங்கலத் தொழில்கள் செய்து
மறைகளால் துதித்து மற்றுந்
தங்களுக் கேற்ற பண்பில்
தகும்பணித் தலைநின் றுய்த்தே
அங்கணர் கோயி லுள்ளா
அகம்படித் தொண்டு செய்வார்.
[4]
வருமுறை எரிமூன் றோம்பி
மன்னுயி ரருளான் மல்கத்
தருமமே பொருளாக் கொண்டு
தத்துவ நெறியிற் செல்லும்
அருமறை நான்கி னோடுஆ
றங்கமும் பயின்று வல்லார்
திருநடம் புரிவார்க் காளாந்
திருவினாற் சிறந்த சீரார்.
[5]
மறுவிலா மரபின் வந்து
மாறிலா ஒழுக்கம் பூண்டார்
அறுதொழி லாட்சி யாலே
யருங்கலி நீக்கி யுள்ளார்
உறுவது நீற்றின் செல்வம்
எனக்கொளும் உள்ளம் மிக்கார்
பெறுவது சிவன்பா லன்பாம்
பேறெனப் பெருகி வாழ்வார்.
[6]
ஞானமே முதலா நான்கும்
நவையறத் தெரிந்து மிக்கார்
தானமுந் தவமும் வல்லார்
தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனமேல் ஒன்றும் இல்லார்
உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையுந் தாங்கி  
மனையறம் புரிந்து வாழ்வார்.
[7]
செம்மையால் தணிந்த சிந்தைத்
தெய்வவே தியர்க ளானார்
மும்மைஆ யிரவர் தாங்கள்
போற்றிட முதல்வ னாரை
இம்மையே பெற்று வாழ்வார்
இனிப்பெறும் பேறொன் றில்லார்
தம்மையே தமக்கொப் பான
நிலைமையால் தலைமை சார்ந்தார்.
[8]
இன்றிவர் பெருமை எம்மால்
இயம்பலா மெல்லைத் தாமோ
தென்றமிழ்ப் பயனா யுள்ள
திருத்தொண்டத் தொகைமுன் பாட
அன்றுவன் றொண்டர் தம்மை
யருளிய ஆரூர் அண்ணல்
முன்திரு வாக்காற் கோத்த
முதற்பொரு ளானா ரென்றால்.
[9]
அகலிடத் துயர்ந்த தில்லை
யந்தண ரகில மெல்லாம்
புகழ்திரு மறையோ ரென்றும்
பொதுநடம் போற்றி வாழ்க
நிகழ்திரு நீல கண்டக்
குயவனார் நீடு வாய்மை
திகழுமன் புடைய தொண்டர்
செய்தவங் கூற லுற்றாம்.
[10]

Back to Top
சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
12.020   திருநீலகண்ட நாயனார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வேதியர் தில்லை மூதூர்
வேட்கோவர் குலத்து வந்தார்
மாதொரு பாகம் நோக்கி
மன்னுசிற் றம்ப லத்தே
ஆதியும் முடிவும் இல்லா
அற்புதத் தனிக்கூத் தாடும்
நாதனார் கழல்கள் வாழ்த்தி
வழிபடும் நலத்தின் மிக்கார்.
[1]
பொய்கடிந் தறத்தின் வாழ்வார்
புனற்சடை முடியார்க் கன்பர்
மெய்யடி யார்கட் கான
பணிசெயும் விருப்பில் நின்றார்
வையகம் போற்றுஞ் செய்கை
மனையறம் புரிந்து வாழ்வார்
சைவமெய்த் திருவின் சார்வே
பொருளெனச் சாரு நீரார்.
[2]
அளவிலா மரபின் வாழ்க்கை
மட்கலம் அமுதுக் காக்கி
வளரிளந் திங்கட் கண்ணி
மன்றுளார் அடியார்க் கென்றும்
உளமகிழ் சிறப்பின் மல்க
ஓடளித் தொழுகு நாளில்
இளமைமீ தூர இன்பத்
துறையினில் எளிய ரானார்.
[3]
அவர்தங்கண் மனைவி யாரும்
அருந்ததிக் கற்பின் மிக்கார்
புவனங்க ளுய்ய ஐயர்
பொங்குநஞ் சுண்ண யாஞ்செய்
தவநின்று தடுத்த தென்னத்
தகைந்துதான் தரித்த தென்று
சிவனெந்தை கண்டந் தன்னைத்
திருநீல கண்ட மென்பார்.
[4]
ஆனதங் கேள்வர் அங்கோர்
பரத்தைபா லணைந்து நண்ண
மானமுன் பொறாது வந்த
ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய வெல்லாஞ் செய்தே
உடனுறைவு இசையா ரானார்
தேனலர் கமலப் போதில்
திருவினு முருவின் மிக்கார்.
[5]
மூண்டவப் புலவி தீர்க்க
அன்பனார் முன்பு சென்று
பூண்டயங் கிளமென் சாயல்
பொற்கொடி யனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி
மெய்யுற அணையும் போதில்
தீண்டுவீ ராயின் எம்மைத்
திருநீல கண்ட மென்றார்.
[6]
ஆதியார் நீல கண்டத்
தளவுதாங் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட
பெரியவர் பெயர்ந்து நீங்கி
ஏதிலார் போல நோக்கி
எம்மைஎன் றதனால் மற்றை
மாதரார் தமையும் என்றன்
மனத்தினுந் தீண்டேன் என்றார்.
[7]
கற்புறு மனைவி யாரும்
கணவனார்க் கான வெல்லாம்
பொற்புற மெய்யு றாமற்
பொருந்துவ போற்றிச் செய்ய
இற்புறம் பொழியா தங்கண்
இருவரும் வேறு வைகி
அற்புறு புணர்ச்சி யின்மை
அயலறி யாமை வாழ்ந்தார்.
[8]
இளமையின் மிக்கு ளார்கள்
இருவரு மறிய நின்ற
அளவில்சீ ராணை போற்றி
ஆண்டுகள் பலவுஞ் செல்ல
வளமலி யிளமை நீங்கி
வடிவுறு மூப்பு வந்து
தளர்வொடு சாய்ந்தும் அன்பு
தம்பிரான் திறத்துச் சாயார்.
[9]
இந்நெறி யொழுகு நாளில்
எரிதளிர்த் தென்ன நீண்ட
மின்னொளிர் சடையோன்
தானுந் தொண்டரை விளக்கங் காண
நன்னெறி யிதுவா மென்று
ஞாலத்தோர் விரும்பி உய்யும்
அந்நெறி காட்டு மாற்றால்
அருட்சிவ யோகி யாகி.
[10]
கீளொடு கோவணஞ் சாத்திக் கேடிலா
வாள்விடு நீற்றொளி மலர்ந்த மேனிமேல்
தோளொடு மார்பிடைத் துவளும் நூலுடன்
நீளொளி வளர்திரு முண்ட நெற்றியும்.
[11]
நெடுஞ்சடை கரந்திட நெறித்த பம்பையும்
விடுங்கதிர் முறுவல்வெண் ணிலவும் மேம்பட
இடும்பலிப் பாத்திர மேந்து கையராய்
நடந்துவேட் கோவர்தம் மனையை நண்ணினார்.

[12]
நண்ணிய தவச்சிவ யோக நாதரைக்
கண்ணுற நோக்கிய காத லன்பர்தாம்
புண்ணியத் தொண்டராம் என்று போற்றிசெய்
தெண்ணிய உவகையால் எதிர்கொண் டேத்தினார்.
[13]
பிறைவளர் சடைமுடிப் பிரானைத் தொண்டரென்று
உறையுளில் அணைந்துபே ருவகை கூர்ந்திட
முறைமையின் வழிபட மொழிந்த பூசைகள்
நிறைபெரு விருப்பொடு செய்து நின்றபின்.
[14]
எம்பிரான் யான்செயும் பணிஎது என்றனர்
வம்புலா மலர்ச்சடை வள்ளல் தொண்டனார்
உம்பர்நா யகனும்இவ் வோடுன் பால்வைத்து
நம்பிநீ தருகநாம் வேண்டும் போதென்று.
[15]
தன்னையொப் பரியது தலத்துத் தன்னுழைத்
துன்னிய யாவையுந் தூய்மை செய்வது
பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
இன்னதன் மையதிது வாங்கு நீயென.
[16]
தொல்லைவேட் கோவர்தங் குலத்துள் தோன்றிய
மல்குசீர்த் தொண்டனார் வணங்கி வாங்கிக்கொண்டு
ஒல்லையின் மனையிலோர் மருங்கு காப்புறும்
எல்லையில் வைத்துவந் திறையை யெய்தினார்.
[17]
வைத்தபின் மறையவ ராகி வந்தருள்
நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்
உய்த்துடன் போய்விடை கொண்டு மீண்டனர்
அத்தர்தாம் அம்பல மணைய மேவினார்.
[18]
சாலநாள் கழிந்த பின்பு
தலைவனார் தாமுன் வைத்த
கோலமார் ஓடு தன்னைக்
குறியிடத் தகலப் போக்கிச்
சீலமார் கொள்கை யென்றுந்
திருந்துவேட் கோவர் தம்பால்
வாலிதாம் நிலைமை காட்ட
முன்புபோல் மனையில் வந்தார்.
[19]
வந்தபின் தொண்ட னாரும்
எதிர்வழி பாடு செய்து
சிந்தைசெய் தருளிற் றெங்கள்
செய்தவ மென்று நிற்ப
முந்தைநா ளுன்பால் வைத்த
மொய்யொளி விளங்கும் ஓடு
தந்துநில் என்றான் எல்லாந்
தான்வைத்து வாங்க வல்லான்.
[20]
என்றவர் விரைந்து கூற
இருந்தவர் ஈந்த ஓடு
சென்றுமுன் கொணர்வான் புக்கார்
கண்டிலர் திகைத்து நோக்கி
நின்றவர் தம்மைக் கேட்டார்
நேடியுங் காணார் மாயை
ஒன்றுமங் கறிந்தி லார்தாம் 
உரைப்பதொன் றின்றி நின்றார்.
[21]
மறையவ னாகி நின்ற
மலைமகள் கேள்வன் தானும்
உறையுளிற் புக்கு நின்ற
ஒருபெருந் தொண்டர் கேட்ப
இறையிலிங் கெய்தப் புக்காய்
தாழ்த்ததென் னென்ன வந்து
கறைமறை மிடற்றி னானைக்
கைதொழு துரைக்க லுற்றார்.
[22]
இழையணி முந்நூன் மார்பின்
எந்தைநீர் தந்து போன
விழைதரும் ஓடு வைத்த
வேறிடந் தேடிக் காணேன்
பழையமற் றதனில் நல்ல
பாத்திரந் தருவன் கொண்டிப்
பிழையினைப் பொறுக்க வேண்டும்
பெருமவென் றிறைஞ்சி நின்றார்.
[23]
சென்னியால் வணங்கி நின்ற
தொண்டரைச் செயிர்த்து நோக்கி
என்னிது மொழிந்த வாநீ
யான்வைத்த மண்ணோ டன்றிப்

பொன்னினா லமைத்துத் தந்தாய்
ஆயினுங் கொள்ளேன் போற்ற முன்னைநான் வைத்த வோடே
கொண்டுவா வென்றான் முன்னோன்.
[24]
கேடிலாப் பெரியோய் என்பால்
வைத்தது கெடுத லாலே
நாடியுங் காணேன் வேறு
நல்லதோர் ஓடு சால
நீடுசெல் வதுதா னொன்று
தருகின்றேன் எனவுங் கொள்ளாது
ஊடிநின் றுரைத்த தென்றன்
உணர்வெலா மொழித்த தென்ன.
[25]
ஆவதென் நின்பால் வைத்த
அடைக்கலப் பொருளை வௌவிப்
பாவகம் பலவும் செய்து
பழிக்குநீ யொன்றும் நாணாய்
யாவருங் காண உன்னை
வளைத்துநான் கொண்டே யன்றிப்
போவதுஞ் செய்யே னென்றான்
புண்ணியப் பொருளாய் நின்றான்.

[26]
வளத்தினான் மிக்க ஓடு
வௌவினேன் அல்லேன் ஒல்லை
உளத்தினுங் களவி லாமைக்
கென்செய்கேன் உரையு மென்னக்
களத்துநஞ் சொளித்து நின்றான்
காதலுன் மகனைப் பற்றிக்
குளத்தினின் மூழ்கிப் போவென்
றருளினான் கொடுமை யில்லான்.
[27]
ஐயர்நீ ரருளிச் செய்த
வண்ணம்யான் செய்வ தற்குப்
பொய்யில்சீர்ப் புதல்வ னில்லை
என்செய்கேன் புகலு மென்ன
மையறு சிறப்பின் மிக்க
மனையவள் தன்னைப் பற்றி
மொய்யலர் வாவி புக்கு 
மூழ்குவாய் எனமொ ழிந்தார்.
[28]
கங்கைநதி கரந்தசடை
கரந்தருளி யெதிர்நின்ற
வெங்கண்விடை யவர்அருள
வேட்கோவ ருரைசெய்வார்
எங்களிலோர் சபதத்தால்
உடன்மூழ்க இசைவில்லை
பொங்குபுனல் யான்மூழ்கித்
தருகின்றேன் போதுமென.
[29]
தந்ததுமுன் தாராதே
கொள்ளாமைக் குன்மனைவி
அந்தளிர்ச்செங் கைப்பற்றி
அலைபுனலின் மூழ்காதே
சிந்தைவலித் திருக்கின்றாய்
தில்லைவா ழந்தணர்கள்
வந்திருந்த பேரவையில்
மன்னுவன்யா னெனச்சொன்னார்.
[30]
நல்லொழுக்கந் தலைநின்றார்
நான்மறையின் துறைபோனார்
தில்லைவா ழந்தணர்கள்
வந்திருந்த திருந்தவையில்
எல்லையிலான் முன்செல்ல
இருந்தொண்ட ரவர்தாமும்
மல்குபெருங் காதலினால்
வழக்கின்மே லிட்டணைந்தார்.
[31]
அந்தணனாம் எந்தைபிரான்
அருமறையோர் முன்பகர்வான்
இந்தவேட் கோவன்பால்
யான்வைத்த பாத்திரத்தைத்
தந்தொழியான் கெடுத்தானேல்
தன்மனைவி கைப்பற்றி
வந்துமூழ் கியுந்தாரான்
வலிசெய்கின் றான்என்றார்.

[32]
நறைகமழுஞ் சடைமுடியும்
நாற்றோளும் முக்கண்ணும்
கறைமருவுந் திருமிடறுங்
கரந்தருளி எழுந்தருளும்
மறையவனித் திறமொழிய
மாமறையோர் உரைசெய்வார்
நிறையுடைய வேட்கோவர்
நீர்மொழியும் புகுந்ததென.
[33]
நீணிதியாம் இதுவென்று
நின்றவிவர் தருமோடு
பேணிநான் வைத்தவிடம்
பெயர்ந்துகரந் ததுகாணேன்
பூணணிநூன் மணிமார்பீர்
புகுந்தபரி சிதுவென்று
சேணிடையுந் தீங்கடையாத்
திருத்தொண்டர் உரைசெய்தார்.

[34]
திருவுடை யந்த ணாளர்
செப்புவார் திகழ்ந்த நீற்றின்
உருவுடை யிவர்தாம் வைத்த
வோட்டினைக் கெடுத்தீ ரானால்
தருமிவர் குளத்தின் மூழ்கித்
தருகவென் றுரைத்தா ராகில்
மருவிய மனைவி யோடு
மூழ்குதல் வழக்கே யென்றார்.
[35]
அருந்தவத் தொண்டர் தாமும்
அந்தணர் மொழியக் கேட்டுத்
திருந்திய மனைவி யாரைத்
தீண்டாமை செப்ப மாட்டார்
பொருந்திய வகையான் மூழ்கித்
தருகின்றேன் போது மென்று
பெருந்தவ முனிவ ரோடும்
பெயர்ந்துதம் மனையைச் சார்ந்தார்.
[36]
மனைவியார் தம்மைக் கொண்டு
மறைச்சிவ யோகி யார்முன்
சினவிடைப் பாகர் மேவுந்
திருப்புலீச் சுரத்து முன்னர்
நனைமலர்ச் சோலை வாவி
நண்ணித்தம் உண்மை காப்பார்
புனைமணி வேணுத் தண்டின்
இருதலை பிடித்துப் புக்கார்.
[37]
தண்டிரு தலையும் பற்றிப்
புகுமவர் தம்மை நோக்கி
வெண்டிரு நீற்று முண்ட
வேதியர் மாதைத் தீண்டிக்
கொண்டுடன் மூழ்கீ ரென்னக்
கூடாமை பாரோர் கேட்கப்
பண்டுதஞ் செய்கை சொல்லி
மூழ்கினார் பழுதி லாதார்.
[38]
வாவியின் மூழ்கி ஏறுங்
கணவரும் மனைவி யாரும்
மேவிய மூப்பு நீங்கி
விருப்புறும் இளமை பெற்றுத்
தேவரும் முனிவர் தாமுஞ்
சிறப்பொடு பொழியுந் தெய்வப்
பூவின்மா மழையின் மீள
மூழ்குவார் போன்று தோன்ற.
[39]
அந்நிலை யவரைக் காணும்
அதிசயங் கண்டா ரெல்லாம்
முன்னிலை நின்ற வேத
முதல்வரைக் கண்டா ரில்லை
இந்நிலை இருந்த வண்ணம்
என்னென மருண்டு நின்றார்
துன்னிய விசும்பி னூடு
துணையுடன் விடைமேற் கண்டார்.
[40]
கண்டனர் கைக ளாரத்
தொழுதனர் கலந்த காதல்
அண்டரும் ஏத்தி னார்கள்
அன்பர்தம் பெருமை நோக்கி
விண்டரும் பொலிவு காட்டி
விடையின்மேல் வருவார் தம்மைத்
தொண்டரும் மனைவி யாருந்
தொழுதுடன் போற்றி நின்றார்.
[41]
மன்றுளே திருக்கூத் தாடி
அடியவர் மனைகள் தோறுஞ்
சென்றவர் நிலைமை காட்டுந்
தேவர்கள் தேவர் தாமும்
வென்றஐம் புலனான் மிக்கீர்
விருப்புட னிருக்க நம்பால்
என்றுமிவ் விளமை நீங்கா
தென்றெழுந் தருளி னாரே.
[42]
விறலுடைத் தொண்ட னாரும்
வெண்ணகைச் செவ்வாய் மென்றோள்
அறலியற் கூந்த லாராம்
மனைவியும் அருளின் ஆர்ந்த
திறலுடைச் செய்கை செய்து
சிவலோக மதனை யெய்திப்
பெறலரு மிளமை பெற்றுப்
பேரின்பம் உற்றா ரன்றே.
[43]
அயலறி யாத வண்ணம்
அண்ணலா ராணை யுய்த்த
மயலில்சீர்த் தொண்ட னாரை
யானறி வகையால் வாழ்த்திப்
புயல்வளர் மாட நீடும்
பூம்புகார் வணிகர் பொய்யில்
செயலியற் பகையார் செய்த
திருத்தொண்டு செப்ப லுற்றேன்.
[44]

Back to Top
சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
12.030   இயற்பகை நாயனார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சென்னி வெண்குடை நீடந பாயன்
திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின்
மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு
வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப்
பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து
புணரி தன்னையும் புனிதமாக் குவதோர்
நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய
நலஞ்சி றந்தது வளம்புகார் நகரம்.
[1]
அக்கு லப்பதிக் குடிமுதல் வணிகர்
அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார்
செக்கர் வெண்பிறைச் சடையவ ரடிமைத்
திறத்தின் மிக்கவர் மறைச்சிலம் படியார்
மிக்க சீரடி யார்கள்யா ரெனினும்
வேண்டும் யாவையும் இல்லையென் னாதே
இக்க டற்படி நிகழமுன் கொடுக்கும்
இயல்பின் நின்றவர் உலகியற் பகையார்.
[2]
ஆறு சூடிய ஐயர்மெய் யடிமை
அளவி லாததோர் உளம்நிறை யருளால்
நீறு சேர்திரு மேனியர் மனத்து
நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறி லாதநன் னெறியினில் விளங்கும்
மனைய றம்புரி மகிழ்ச்சியின் வந்த
பேறெ லாம்அவ ரேவின செய்யும்
பெருமை யேயெனப் பேணிவாழ் நாளில்.
[3]
ஆயும் நுண்பொரு ளாகியும் வெளியே
அம்ப லத்துள்நின் றாடுவா ரும்பர்
நாய கிக்குமஃ தறியவோ பிரியா
நங்கை தானறி யாமையோ அறியோம்
தூய நீறுபொன் மேனியில் விளங்கத்
தூர்த்த வேடமுந் தோன்றவே தியராய்
மாய வண்ணமே கொண்டுதம் தொண்டர்
மறாத வண்ணமுங் காட்டுவான் வந்தார்.
[4]
வந்து தண்புகார் வணிகர்தம் மறுகின்
மருங்கி யற்பகை யார்மனை புகுத
எந்தை யெம்பிரான் அடியவர் அணைந்தார்
என்று நின்றதோர் இன்பஆ தரவால்
சிந்தை யன்பொடு சென்றெதிர் வணங்கிச்
சிறப்பின் மிக்கவர்ச் சனைகள்முன் செய்து
முந்தை யெம்பெருந் தவத்தினால் என்கோ
முனிவர் இங்கெழுந் தருளிய தென்றார்.
[5]
என்று கூறிய இயற்பகை யார்முன்
எய்தி நின்றவக் கைதவ மறையோர்
கொன்றை வார்சடை யாரடி யார்கள்
குறித்து வேண்டின குணமெனக் கொண்டே
ஒன்று நீரெதிர் மறாதுவந் தளிக்கும்
உண்மை கேட்டுநும் பாலொன்று வேண்டி
இன்று நானிங்கு வந்தனன் அதனுக்கு
இசைய லாமெனில் இயம்பலா மென்றார்.
[6]
என்ன அவ்வுரை கேட்டியற் பகையார்
யாதும் ஒன்றுஎன் பக்கலுண் டாகில்
அன்ன தெம்பிரான் அடியவர் உடைமை
ஐய மில்லைநீ ரருள்செய்யு மென்ன
மன்னு காதலுன் மனைவியை வேண்டி
வந்த திங்கென அந்தண ரெதிரே
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து
தூய தொண்டனார் தொழுதுரை செய்வார்.
[7]
இதுவெ னக்குமுன் புள்ளதே வேண்டி
எம்பி ரான்செய்த பேறெனக் கென்னாக்
கதுமெனச் சென்று தம்மனை வாழ்க்கைக்
கற்பின் மேம்படு காதலி யாரை
விதிம ணக்குல மடந்தைஇன் றுனைஇம்
மெய்த்த வர்க்குநான் கொடுத்தனன் என்ன
மதும லர்க்குழல் மனைவியார் கலங்கி
மனந்தெ ளிந்தபின் மற்றிது மொழிவார்.
[8]
இன்று நீரெனக் கருள்செய்த திதுவேல்
என்னு யிர்க்கொரு நாதநீ ருரைத்தது
ஒன்றை நான்செயு மத்தனை யல்லால்
உரிமை வேறுள தோவெனக் கென்று
தன்த னிப்பெருங் கணவரை வணங்கத்
தாழ்ந்து தொண்டனார் தாமெதிர் வணங்கச்
சென்று மாதவன் சேவடி பணிந்து
திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்.
[9]
மாது தன்னைமுன் கொடுத்தமா தவர்தாம்
மனம கிழ்ந்துபே ருவகையின் மலர்ந்தே
யாது நானினிச் செய்பணி என்றே
இறைஞ்சி நின்றவர் தம்மெதிர் நோக்கிச்
சாதி வேதிய ராகிய தலைவர்
தையல் தன்னையான் தனிக்கொடு போகக்
காதல் மேவிய சுற்றமும் பதியுங்
கடக்க நீதுணை போதுக வென்றார்.
[10]
என்றவர் அருளிச் செய்ய
யானேமுன் செய்குற் றேவல்
ஒன்றிது தன்னை யென்னை
யுடையவர் அருளிச் செய்ய
நின்றது பிழையா மென்று
நினைந்துவே றிடத்துப் புக்குப்
பொன்றிகழ் அறுவை சாத்திப்
பூங்கச்சுப் பொலிய வீக்கி.
[11]
வாளொடு பலகை யேந்தி
வந்தெதிர் வணங்கி மிக்க
ஆளரி யேறு போல்வார்
அவரைமுன் போக்கிப் பின்னே
தோளிணை துணையே யாகப்
போயினார் துன்னி னாரை
நீளிடைப் படமுன் கூடி
நிலத்திடை வீழ்த்த நேர்வார்.
[12]
மனைவியார் சுற்றத் தாரும்
வள்ளலார் சுற்றத் தாரும்
இனையதொன் றியாரே செய்தார்
இயற்பகை பித்தன் ஆனால்
புனையிழை தன்னைக் கொண்டு
போவதா மொருவ னென்று
துனைபெரும் பழியை மீட்பான்
தொடர்வதற் கெழுந்து சூழ்வார்.
[13]
வேலொடு வில்லும் வாளுஞ்
சுரிகையு மெடுத்து மிக்க
காலென விசையிற் சென்று
கடிநகர்ப் புறத்துப் போகிப்
பாலிரு மருங்கு மீண்டிப்
பரந்தஆர்ப் பரவம் பொங்க
மால்கடல் கிளர்ந்த தென்ன
வந்தெதிர் வளைத்துக் கொண்டார்.
[14]
வழிவிடுந் துணைபின் போத
வழித்துணை யாகி யுள்ளார்
கழிபெருங் காதல் காட்டிக்
காரிகை யுடன்போம் போதில்
அழிதகன் போகேல் ஈண்டவ்
வருங்குலக் கொடியை விட்டுப்
பழிவிட நீபோ வென்று
பகர்ந்தெதிர் நிரந்து வந்தார்.
[15]
மறைமுனி யஞ்சி னான்போல்
மாதினைப் பார்க்க மாதும்
இறைவனே அஞ்ச வேண்டா
இயற்பகை வெல்லு மென்ன
அறைகழ லண்ணல் கேளா
அடியனே னவரை யெல்லாம்
தறையிடைப் படுத்து கின்றேன்
தளர்ந்தருள் செய்யே லென்று.
[16]
பெருவிறல் ஆளி என்னப்
பிறங்கெரி சிதற நோக்கிப்
பரிபவப் பட்டு வந்த
படர்பெருஞ் சுற்றத் தாரை
ஒருவரு மெதிர்நில் லாமே
ஓடிப்போய்ப் பிழையு மன்றேல்
எரிசுடர் வாளிற் கூறாய்த்
துடிக்கின்றீர் என்று நேர்ந்தார்.
[17]
ஏடநீ யென்செய் தாயால்
இத்திறம் இயம்பு கின்றாய்
நாடுறு பழியும் ஒன்னார்
நகையையும் நாணாய் இன்ற
பாடவம் உரைப்ப துன்றன்
மனைவியைப் பனவற் கீந்தோ
கூடவே மடிவ தன்றிக்
கொடுக்கயாம் ஒட்டோ மென்றார்.
[18]
மற்றவர் சொன்ன மாற்றம்
கேட்டலும் மனத்தின் வந்த
செற்றமுன் பொங்க உங்கள்
உடற்றுணி யெங்குஞ் சிந்தி
முற்றுநும் உயிரை யெல்லாம்
முதல்விசும் பேற்றிக் கொண்டு
நற்றவர் தம்மைப் போக
விடுவன்என் றெழுந்தார் நல்லோர்.
[19]
நேர்ந்தவர் எதிர்ந்த போது
நிறைந்தவச் சுற்றத் தாரும்
சார்ந்தவர் தம்முன் செல்லார்
தையலைக் கொண்டு பெற்றம்
ஊர்ந்தவர் படிமேற் செல்ல
உற்றெதிர் உடன்று பொங்கி
ஆர்ந்தவெஞ் சினத்தால் மேற்சென்
றடர்ந்தெதிர் தடுத்தா ரன்றே.
[20]
சென்றவர் தடுத்த போதில்
இயற்பகை யார்முன் சீறி
வன்றுணை வாளே யாகச்
சாரிகை மாறி வந்து
துன்றினர் தோளுந் தாளுந்
தலைகளுந் துணித்து வீழ்த்து
வென்றடு புலியே றென்ன
அமர்விளை யாட்டின் மிக்கார்.
[21]
மூண்டுமுன் பலராய் வந்தார்
தனிவந்து முட்டி னார்கள்
வேண்டிய திசைகள் தோறும்
வேறுவே றமர்செய் போழ்தில்
ஆண்டகை வீரர் தாமே
அனைவர்க்கும் அனைவ ராகிக்
காண்டகு விசையிற் பாய்ந்து
கலந்துமுன் துணித்து வீழ்த்தார்.
[22]
சொரிந்தன குடல்க ளெங்குந்
துணிந்தன உடல்க ளெங்கும்
விரிந்தன தலைக ளெங்கும்
மிடைந்தன கழுகு மெங்கும்
எரிந்தன விழிக ளெங்கும்
எதிர்ப்பவ ரொருவ ரின்றித்
திரிந்தனர் களனில் எங்குஞ்
சிவன்கழல் புனைந்த வீரர்.
[23]
மாடலை குருதி பொங்க
மடிந்தசெங் களத்தின் நின்றும்
ஆடுறு செயலின் வந்த
கிளைஞரோ டணைந்தார் தம்மில்
ஓடினார் உள்ளார் உய்ந்தார்
ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார்
நீடிய வாளுந் தாமும்
நின்றவர் தாமே நின்றார்.
[24]
திருவுடை மனைவி யாரைக்
கொடுத்துஇடைச் செறுத்து முன்பு
வருபெருஞ் சுற்ற மெல்லாம்
வாளினால் துணித்து மாட்டி
அருமறை முனியை நோக்கி
அடிகள்நீர் அஞ்சா வண்ணம்
பொருவருங் கானம் நீங்க
விடுவனென் றுடனே போந்தார்.
[25]
இருவரால் அறிய வொண்ணா
ஒருவர்பின் செல்லும் ஏழை
பொருதிறல் வீரர் பின்பு
போகமுன் போகும் போதில்
அருமறை முனிவன் சாய்க்கா
டதன்மருங் கணைய மேவித்
திருமலி தோளி னானை
மீளெனச் செப்பி னானே.
[26]
தவமுனி தன்னை மீளச் 
சொன்னபின் தலையால் ஆர
அவன்மலர்ப் பதங்கள் சூடி
அஞ்சலி கூப்பி நின்று
புவனமூன் றுய்ய வந்த
பூசுரன் தன்னை யேத்தி
இவனருள் பெறப்பெற் றேன்என்
றியற்பகை யாரும் மீண்டார்.
[27]
செய்வதற் கரிய செய்கை
செய்தநற் றொண்டர் போக
மைதிகழ் கண்டன் எண்டோள்
மறையவன் மகிழ்ந்து நோக்கிப்
பொய்தரும் உள்ளம் இல்லான்
பார்க்கிலன் போனா னென்று
மெய்தரு சிந்தை யாரை
மீளவும் அழைக்க லுற்றார்.
[28]
இயற்பகை முனிவா ஓலம்
ஈண்டுநீ வருவாய் ஓலம்
அயர்ப்பிலா தானே ஓலம்
அன்பனே ஓலம் ஓலம்
செயற்கருஞ் செய்கை செய்த
தீரனே ஓலம் என்றான்
மயக்கறு மறைஓ லிட்டு
மாலயன் தேட நின்றான்.
[29]
அழைத்தேபே ரோசை கேளா
அடியனேன் வந்தேன் வந்தேன்
பிழைத்தவ ருளரே லின்னும்
பெருவலித் தடக்கை வாளின்
இழைத்தவ ராகின் றாரென்
றியற்பகை யார்வந் தெய்தக்
குழைப்பொலி காதி னானும்
மறைந்தனன் கோலங் கொள்வான்.
[30]
சென்றவர் முனியைக் காணார்
சேயிழை தன்னைக் கண்டார்
பொன்றிகழ் குன்று வெள்ளிப்
பொருப்பின்மேல் பொலிந்த தென்னத்
தன்றுணை யுடனே வானில்
தலைவனை விடைமேற் கண்டார்
நின்றிலர் தொழுது வீழ்ந்தார்
நிலத்தினின் றெழுந்தார் நேர்ந்தார்.
[31]
சொல்லுவ தறியேன் வாழி
தோற்றிய தோற்றம் போற்றி
வல்லைவந் தருளி யென்னை
வழித்தொண்டு கொண்டாய் போற்றி
எல்லையில் இன்ப வெள்ளம்
எனக்கருள் செய்தாய் போற்றி
தில்லையம் பலத்து ளாடுஞ்
சேவடி போற்றி யென்ன.
[32]
விண்ணிடை நின்ற வெள்ளை
விடையவர் அடியார் தம்மை
எண்ணிய உலகு தன்னில்
இப்படி நம்பா லன்பு
பண்ணிய பரிவு கண்டு
மகிழ்ந்தனம் பழுதி லாதாய்
நண்ணிய மனைவி யோடு
நம்முடன் போது கென்று.
[33]
திருவளர் சிறப்பின் மிக்க
திருத்தொண்டர் தமக்குந் தேற்றம்
மருவிய தெய்வக் கற்பின்
மனைவியார் தமக்குந் தக்க
பெருகிய அருளின் நீடு
பேறளித் திமையோ ரேத்தப்
பொருவிடைப் பாகர் மன்னும்
பொற்பொது அதனுட் புக்கார்.
[34]
வானவர் பூவின் மாரி
பொழியமா மறைகள் ஆர்ப்ப
ஞானமா முனிவர் போற்ற
நலமிகு சிவலோ கத்தில்
ஊனமில் தொண்டர் கும்பிட்
டுடனுறை பெருமை பெற்றார்
ஏனைய சுற்றத் தாரும்
வானிடை யின்பம் பெற்றார்.
[35]
இன்புறு தாரந் தன்னை
ஈசனுக் கன்ப ரென்றே
துன்புறா துதவுந் தொண்டர்
பெருமையைத் தொழுது வாழ்த்தி
அன்புறு மனத்தால் நாதன்
அடியவர்க் கன்பு நீடும்
மன்புகழ் இளைசை மாறன்
வளத்தினை வழுத்த லுற்றேன்.
[36]

Back to Top
சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
12.040   இளையான் குடி மாற  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அம்பொன் நீடிய அம்ப
லத்தினில் ஆடு வார்அடி சூடுவார்
தம்பி ரானடி மைத்தி றத்துயர்
சால்பின் மேன்மைத ரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர
நற்கு லஞ்செய்த வத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கி னார்இளை
யான்கு டிப்பதி மாறனார்.
[1]
ஏரின் மல்குவ ளத்தி னால்வரும்
எல்லை இல்லதொர் செல்வமும்
நீரின் மல்கிய வேணி யார்அடி
யார்தி றத்துநி றைந்ததோர்
சீரின் மல்கிய அன்பின் மேன்மை
திருந்த மன்னிய சிந்தையும்
பாரின் மல்கவி ரும்பி மற்றவை
பெற்ற நீடுப யன்கொள்வார்.
[2]
ஆர மென்புபு னைந்த ஐயர்தம்
அன்பர் என்பதொர் தன்மையால்
நேர வந்தவர் யாவ ராயினும்
நித்த மாகிய பத்திமுன்
கூர வந்தெதிர் கொண்டு கைகள்கு
வித்து நின்றுசெ விப்புலத்
தீர மென்மது ரப்ப தம்பரி
வெய்த முன்னுரை செய்தபின்.
[3]
கொண்டு வந்தும னைப்பு குந்துகு
குலாவு பாதம்வி ளக்கியே
மண்டு காதலின் ஆத னத்திடை
வைத்த ருச்சனை செய்தபின்
உண்டி நாலுவி தத்தி லாறுசு
வைத்தி றத்தினில் ஒப்பிலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில்
அமுது செய்யஅ ளித்துளார்.
[4]
ஆளு நாயகர் அன்பர் ஆனவர்
அளவி லார்உளம் மகிழவே
நாளு நாளும்நி றைந்து வந்துநு
கர்ந்த தன்மையின் நன்மையால்
நீளு மாநிதி யின்ப ரப்புநெ 
ருங்கு செல்வநி லாவியெண்
தோளி னார்அள கைக்கி ருத்திய
தோழ னாரென வாழுநாள்.
[5]
செல்வம் மேவிய நாளி லிச்செயல்
செய்வ தன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குர வான போதினும்
வல்லர் என்றறி விக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்லம
றைந்து நாடொறு மாறிவந்
தொல்லை யில்வறு மைப்ப தம்புக
உன்னி னார்தில்லை மன்னினார்.
[6]
இன்ன வாறுவ ளஞ்சு ருங்கவும்
எம்பி ரான்இளை யான்குடி
மன்னன் மாறன்ம னஞ்சு ருங்குத
லின்றி யுள்ளன மாறியுந்
தன்னை மாறியி றுக்க உள்ளக
டன்கள் தக்கன கொண்டுபின்
முன்னை மாறில்தி ருப்ப ணிக்கண்மு
திர்ந்த கொள்கைய ராயினார்.
[7]
மற்ற வர்செய லின்ன தன்மைய
தாக மாலய னானஅக்
கொற்ற ஏனமும் அன்ன முந்தெரி
யாத கொள்கைய ராயினார்
பெற்ற மூர்வதும் இன்றி நீடிய
பேதை யாளுடன் இன்றியோர்
நற்ற வத்தவர் வேட மேகொடு
ஞால முய்ந்திட நண்ணினார்.
[8]
மாரிக் காலத் திரவினில் வைகியோர்
தாரிப் பின்றிப் பசிதலைக் கொள்வது
பாரித் தில்லம் அடைத்தபின் பண்புற
வேரித் தாரான் விருந்தெதிர் கொண்டனன்.
[9]
ஈர மேனியை நீக்கி இடங்கொடுத்
தார வின்னமு தூட்டுதற் காசையால்
தார மாதரை நோக்கித் தபோதனர்
தீர வேபசித் தார்செய்வ தென்னென்று.
[10]
நமக்கு முன்பிங் குணவிலை யாயினும்
இமக்கு லக்கொடி பாகர்க் கினியவர்
தமக்கு நாம்இன் னடிசில் தகவுற
அமைக்கு மாறெங்ங னேஅணங் கேயென.
[11]
மாது கூறுவள் மற்றொன்றும் காண்கிலேன்
ஏதி லாரும் இனித்தரு வாரில்லை
போதும் வைகிற்றுப் போமிடம் வேறிலை
தீது செய்வினை யேற்கென் செயலென்று.
[12]
செல்லல் நீங்கப் பகல்வித்தி யசெந்நெல்
மல்லல் நீர்முளை வாரிக்கொ டுவந்தால்
வல்ல வாறமு தாக்கலும் ஆகுமற்
றல்ல தொன்றறி யேனென் றயர்வுற.
[13]
மற்றம் மாற்ற மனைவியார் கூறமுன்
பெற்ற செல்வம் எனப்பெரி துள்மகிழ்ந்
துற்ற காதலி னால்ஒருப் பட்டனர்
சுற்று நீர்வயல் செல்லத்தொ டங்குவார்.
[14]
பெருகு வானம் பிறங்கம ழைபொழிந்
தருகு நாப்பண் அறிவருங் கங்குல்தான்
கருகு மையிரு ளின்கணங் கட்டுவிட்
டுருகு கின்றது போன்ற துலகெலாம்.
[15]
எண்ணு மிவ்வுல கத்தவர் யாவருந்
துண்ணெ னும்படி தோன்றமுன் தோன்றிடில்
வண்ண நீடிய மைக்குழம் பாம்என்று
நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து.
[16]
உள்ள மன்புகொண் டூக்கவோர் பேரிடாக்
கொள்ள முன்கவித் துக்குறி யின்வழிப்
புள்ளு றங்கும் வயல்புகப் போயினார்
வள்ள லார்இளை யான்குடி மாறனார்.
[17]
காலி னால்தட விச்சென்று கைகளால்
சாலி வெண்முளை நீர்வழிச் சார்ந்தன
கோலி வாரி யிடாநிறை யக்கொண்டு
மேலெ டுத்துச் சுமந்தொல்லை மீண்டனர்.
[18]
வந்தபின் மனைவி யாரும்
வாய்தலின் நின்று வாங்கிச்
சிந்தையில் விரும்பி நீரில்
சேற்றினை யலம்பி யூற்றி
வெந்தழல் அடுப்பின் மூட்ட
விறகில்லை யென்ன மேலோர்
அந்தமின் மனையில் நீடும்
அலக்கினை யறுத்து வீழ்த்தார்.
[19]
முறித்தவை அடுப்பின் மாட்டி
முளைவித்துப் பதமுன் கொள்ள
வறுத்தபின் அரிசி யாக்கி
வாக்கிய உலையிற் பெய்து
வெறுப்பில்இன் அடிசி லாக்கி
மேம்படு கற்பின் மிக்கார்
கறிக்கினி யென்செய் கோமென்
றிறைஞ்சினார் கணவ னாரை.
[20]
வழிவரும் இளைப்பி னோடும்
வருத்திய பசியி னாலே
அழிவுறும் ஐயன் என்னும்
அன்பினிற் பொலிந்து சென்று
குழிநிரம் பாத புன்செய்க்
குறும்பயிர் தடவிப் பாசப்
பழிமுதல் பறிப்பார் போலப்
பறித்தவை கறிக்கு நல்க.
[21]
மனைவியார் கொழுநர் தந்த
மனமகிழ் கறிக ளாய்ந்து
புனலிடைக் கழுவித் தக்க
புனிதபாத் திரத்துக் கைம்மை
வினையினால் வேறு வேறு
கறியமு தாக்கிப் பண்டை
நினைவினால் குறையை நேர்ந்து
திருவமு தமைத்து நின்று.
[22]
கணவனார் தம்மை நோக்கிக்
கறியமு தான காட்டி
இணையிலா தவரை ஈண்ட
அமுதுசெய் விப்போ மென்ன
உணர்வினால் உணர ஒண்ணா 
ஒருவரை உணர்த்த வேண்டி
அணையமுன் சென்று நின்றங்
கவர்துயில் அகற்ற லுற்றார்.
[23]
அழுந்திய இடருள் நீங்கி
அடியனேன் உய்ய என்பால்
எழுந்தருள் பெரியோய் ஈண்ட
அமுதுசெய் தருள்க வென்று
தொழும்பனா ருரைத்த போதில்
சோதியா யெழுந்து தோன்றச்
செழுந்திரு மனைவி யாரும்
தொண்டருந் திகைத்து நின்றார்.
[24]
மாலயற் கரிய நாதன்
வடிவொரு சோதி யாகச்
சாலவே மயங்கு வார்க்குச்
சங்கரன் தான்ம கிழ்ந்தே
ஏலவார் குழலாள் தன்னோ
டிடபவா கனனாய்த் தோன்றிச்
சீலமார் பூசை செய்த
திருத்தொண்டர் தம்மை நோக்கி.
[25]
அன்பனே அன்பர் பூசை
அளித்தநீ அணங்கி னோடும்
என்பெரும் உலகை எய்தி
யிருநிதிக் கிழவன் தானே
முன்பெரு நிதியம் ஏந்தி
மொழிவழி ஏவல் கேட்ப
இன்பமார்ந் திருக்க என்றே
அருள்செய்தான் எவர்க்கும் மிக்கான்.
[26]
இப்பரி சிவர்க்குத் தக்க
வகையினால் இன்பம் நல்கி
முப்புரஞ் செற்றா ரன்பர்
முன்பெழுந் தருளிப் போனார்
அப்பெரி யவர்தந் தூய
அடியிணை தலைமேற் கொண்டு
மெய்ப்பொருட் சேதி வேந்தன்
செயலினை விளம்ப லுற்றேன்.
[27]

Back to Top
சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
12.050   மெய்ப் பொருள் நாயனார்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சேதிநன் னாட்டு நீடு
திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின்
வழிவரு மலாடர் கோமான்
வேதநன் னெறியின் வாய்மை
விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க் கன்பர்
கருத்தறிந் தேவல் செய்வார்.
[1]
அரசியல் நெறியின் வந்த
அறநெறி வழாமல் காத்து
வரைநெடுந் தோளால் வென்று
மாற்றலர் முனைகள் மாற்றி
உரைதிறம் பாத நீதி
ஓங்குநீர் மையினின் மிக்கார்
திரைசெய்நீர்ச் சடையான் அன்பர்
வேடமே சிந்தை செய்வார்.
[2]
மங்கையைப் பாக மாக
வைத்தவர் மன்னுங் கோயில்
எங்கணும் பூசை நீடி
ஏழிசைப் பாட லாடல்
பொங்கிய சிறப்பின் மல்கப்
போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள்நா யகருக் கன்பர்
தாளலால் சார்பொன் றில்லார்.
[3]
தேடிய மாடும் நீடு
செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்
காவன ஆகும் என்று
நாடிய மனத்தி னோடு
நாயன்மார் அணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங்கக்
குறைவறக் கொடுத்து வந்தார்.
[4]
இன்னவா றொழுகு நாளில்
இகல்திறம் புரிந்ததோர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும்
ஆசையால் அமர்மேற் கொண்டு
பொன்னணி யோடை யானை
பொருபரி காலாள் மற்றும்
பன்முறை இழந்து தோற்றுப் 
பரிபவப் பட்டுப் போனான்.
[5]
இப்படி இழந்த மாற்றான்
இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப்பொருள் வேந்தன் சீலம்
அறிந்துவெண் ணீறு சாத்தும்
அப்பெரு வேடங் கொண்டே
அற்றத்தில் வெல்வா னாகச்
செப்பரு நிலைமை எண்ணித்
திருக்கோவ லூரிற் சேர்வான்.
[6]
மெய்யெலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த
புத்தகக் கவளி யேந்தி
மைபொதி விளக்கே யென்ன
மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்.
[7]
மாதவ வேடங் கொண்ட
வன்கணான் மாடந் தோறும்
கோதைசூழ் அளக பாரக்
குழைக்கொடி யாட மீது
சோதிவெண் கொடிகள் ஆடும்
சுடர்நெடு மறுகிற் போகிச்
சேதியர் பெருமான் கோயில் 
திருமணி வாயில் சேர்ந்தான்.
[8]
கடையுடைக் காவ லாளர்
கைதொழுதேற நின்றே
உடையவர் தாமே வந்தார்
உள்ளெழுந் தருளும் என்னத்
தடைபல புக்க பின்பு 
தனித்தடை நின்ற தத்தன்
இடைதெரிந் தருள வேண்டும்
துயில்கொளும் இறைவ னென்றான்.
[9]
என்றவன் கூறக் கேட்டே
யானவற் குறுதி கூற
நின்றிடு நீயு மென்றே
அவனையும் நீக்கிப் புக்குப்
பொன்றிகழ் பள்ளிக் கட்டிற்
புரவலன் துயிலு மாடே
மன்றலங் குழல்மென் சாயல்
மாதேவி இருப்பக் கண்டான்.
[10]
கண்டுசென் றணையும் போது
கதுமென எழுந்து தேவி
வண்டலர் மாலை யானை
எழுப்பிட உணர்ந்து மன்னன்
அண்டர்நா யகனார் தொண்ட
ராம்எனக் குவித்த செங்கை
கொண்டு எழுந்து எதிரே சென்று 
கொள்கையின் வணங்கி நின்று.
[11]
மங்கலம் பெருக மற்றென்
வாழ்வுவந் தணைந்த தென்ன
இங்கெழுந் தருளப் பெற்ற
தென்கொலோ என்று கூற
உங்கள்நா யகனார் முன்னம்
உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்குமில் லாத தொன்று
கொடுவந்தேன் இயம்ப வென்றான்.
[12]
பேறெனக் கிதன்மேல் உண்டோ 
பிரானருள் செய்த இந்த
மாறில்ஆ கமத்தை வாசித்
தருள்செய வேண்டு மென்ன
நாறுபூங் கோதை மாதுந்
தவிரவே நானும் நீயும்
வேறிடத் திருத்தல் வேண்டும்
என்றவன் விளம்ப வேந்தன்.
[13]
திருமக ளென்ன நின்ற
தேவியார் தம்மை நோக்கிப்
புரிவுடன் விரைய அந்தப்
புரத்திடைப் போக ஏவித்
தருதவ வேடத் தானைத்
தவிசின்மேல் இருத்தித் தாமும்
இருநிலத் திருந்து போற்றி
இனியருள் செய்யும் என்றார்.
[14]
கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று
புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப் 
பொருளெனத் தொழுது வென்றார்.
[15]
மறைத்தவன் புகுந்த போதே
மனம்அங்கு வைத்த தத்தன்
இறைப்பொழு தின்கட் கூடி
வாளினால் எறிய லுற்றான்
நிறைத்தசெங் குருதி சோர
வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் தத்தா
நமரெனத் தடுத்து வீழ்ந்தார்.
[16]
வேதனை யெய்தி வீழ்ந்த
வேந்தரால் விலக்கப் பட்ட
தாதனாந் தத்தன் தானும்
தலையினால் வணங்கித் தாங்கி
யாதுநான் செய்கே னென்ன
எம்பிரா னடியார் போக
மீதிடை விலக்கா வண்ணம்
கொண்டுபோய் விடுநீ யென்றார்.
[17]
அத்திறம் அறிந்தார் எல்லாம் 
அரசனைத் தீங்கு செய்த
பொய்த்தவன் தன்னைக்
கொல்வோம் எனப்புடை சூழ்ந்த போது
தத்தனு மவரை எல்லாம்
தடுத்துடன் கொண்டு போவான்
இத்தவன் போகப் பெற்ற
திறைவன தாணை என்றான்.
[18]
அவ்வழி அவர்க ளெல்லாம்
அஞ்சியே அகன்று நீங்கச்
செவ்விய நெறியில் தத்தன் 
திருநகர் கடந்து போந்து
கைவடி நெடுவா ளேந்தி
ஆளுறாக் கானஞ் சேர
வெவ்வினைக் கொடியோன் தன்னை
விட்டபின் மீண்டு போந்தான்.
[19]
மற்றவன் கொண்டு போன
வஞ்சனை வேடத் தான்மேல்
செற்றவர் தம்மை நீக்கித் தீ
திலா நெறியில் விட்ட
சொற்றிறங் கேட்க வேண்டிச்
சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான்
கோமகன் குறிப்பில் நின்றான்.
[20]
சென்றடி வணங்கி நின்று
செய்தவ வேடங் கொண்டு
வென்றவற் கிடையூ றின்றி
விட்டனன் என்று கூற
இன்றெனக் கையன் செய்த
தியார்செய வல்லா ரென்று
நின்றவன் தன்னை நோக்கி
நிறைபெருங் கருணை கூர்ந்தார்.
[21]
அரசிய லாயத் தார்க்கும்
அழிவுறுங் காத லார்க்கும்
விரவிய செய்கை தன்னை
விளம்புவார் விதியி னாலே
பரவிய திருநீற் றன்பு 
பாதுகாத் துய்ப்பீர் என்று
புரவலர் மன்று ளாடும்
பூங்கழல் சிந்தை செய்தார்.
[22]
தொண்டனார்க் கிமையப் பாவை
துணைவனார் அவர்முன் தம்மைக்
கண்டவா றெதிரே நின்று
காட்சிதந் தருளி மிக்க
அண்டவா னவர்கட் கெட்டா
அருட்கழல் நீழல் சேரக்
கொண்டவா றிடைய றாமல்
கும்பிடுங் கொள்கை ஈந்தார்.
[23]
இன்னுயிர் செகுக்கக் கண்டும்
எம்பிரான் அன்ப ரென்றே
நன்னெறி காத்த சேதி
நாதனார் பெருமை தன்னில்
என்னுரை செய்தே னாக
இகல்விறன் மிண்டர் பொற்றாள்
சென்னிவைத் தவர்முன்
செய்த திருத்தொண்டு செப்ப லுற்றேன்.
[24]

Back to Top
சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
12.060   விறன்மிண்ட நாயனார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
விரைசெய் நறும்பூந் தொடையிதழி
வேணி யார்தங் கழல்பரவிப்
பரசு பெறுமா தவமுனிவன்
பரசு ராமன் பெறுநாடு
திரைசெய் கடலின் பெருவளனும்
திருந்து நிலனின் செழுவளனும்
வரையின் வளனும் உடன்பெருகி
மல்கு நாடு மலைநாடு.
[1]
வாரி சொரியுங் கதிர்முத்தும்
வயல்மென் கரும்பிற் படுமுத்தும்
வேரல் விளையுங் குளிர்முத்தும்
வேழ மருப்பின் ஒளிர்முத்தும்
மூரல் எனச்சொல் வெண்முத்த
நகையார் தெரிந்து முறைகோக்குஞ்
சேரர் திருநாட் டூர்களின்முன்
சிறந்த மூதூர் செங்குன்றூர்.
[2]
என்னும் பெயரின் விளங்கியுல
கேறும் பெருமை யுடையதுதான்
அன்னம் பயிலும் வயலுழவின்
அமைந்த வளத்தா லாய்ந்தமறை
சொன்ன நெறியின் வழியொழுகும்
தூய குடிமைத் தலைநின்றார்
மன்னுங் குலத்தின் மாமறைநூல்
மரபிற் பெரியோர் வாழ்பதியாம்.
[3]
அப்பொற் பதியி னிடைவேளாண்
குலத்தை விளக்க அவதரித்தார்
செப்பற் கரிய பெருஞ்சீர்த்திச்
சிவனார் செய்ய கழல்பற்றி
எப்பற் றினையும் அறஎறிவார்
எல்லை தெரிய ஒண்ணாதார்
மெய்ப்பத் தர்கள்பாற் பரிவுடையார்
எம்பி ரானார் விறன்மிண்டர்.
[4]
நதியும் மதியும் புனைந்தசடை
நம்பர் விரும்பி நலஞ்சிறந்த
பதிக ளெங்குங் கும்பிட்டுப்
படருங் காதல் வழிச்செல்வார்
முதிரும் அன்பிற் பெருந்தொண்டர்
முறைமை நீடு திருக்கூட்டத்
தெதிர்முன் பரவும் அருள்பெற்றே
இறைவர் பாதந் தொழப்பெற்றார்.
[5]
பொன்தாழ் அருவி மலைநாடு
கடந்து கடல்சூழ் புவியெங்கும்
சென்றா ளுடையார் அடியவர்தம்
திண்மை ஒழுக்க நடைசெலுத்தி
வன்தாள் மேருச் சிலைவளைத்துப்
புரங்கள் செற்ற வைதிகத்தேர்
நின்றா ரிருந்த திருவாரூர்
பணிந்தார் நிகரொன் றில்லாதார்.
[6]
திருவார் பெருமை திகழ்கின்ற
தேவா சிரிய னிடைப்பொலிந்து
மருவா நின்ற சிவனடியார்
தம்மைத் தொழுது வந்தணையா
தொருவா றொதுங்கும் வன்றொண்டன்
புறகென் றுரைப்பச் சிவனருளாற்
பெருகா நின்ற பெரும்பேறு
பெற்றார் மற்றும் பெறநின்றார்.
[7]
சேணார் மேருச் சிலைவளைத்த
சிவனா ரடியார் திருக்கூட்டம்
பேணா தேகும் ஊரனுக்கும்
பிரானாந் தன்மைப் பிறைசூடிப்
பூணா ரரவம் புனைந்தார்க்கும்
புறகென் றுரைக்க மற்றவர்பாற்
கோணா வருளைப் பெற்றார்மற்
றினியார் பெருமை கூறுவார்.
[8]
ஞால முய்ய நாமுய்ய
நம்பி சைவ நன்னெறியின்
சீல முய்யத் திருத்தொண்டத்
தொகைமுன் பாடச் செழுமறைகள்
ஓல மிடவும் உணர்வரியார்
அடியா ருடனாம் உளதென்றால்
ஆலம் அமுது செய்தபிரான்
அடியார் பெருமை அறிந்தார்ஆர்.
[9]
ஒக்க நெடுநாள் இவ்வுலகில்
உயர்ந்த சைவப் பெருந்தன்மை
தொக்க நிலைமை நெறிபோற்றித்
தொண்டு பெற்ற விறன்மிண்டர்
தக்க வகையால் தம்பெருமான்
அருளி னாலே தாள்நிழற்கீழ்
மிக்க கணநா யகராகும்
தன்மை பெற்று விளங்கினார்.
[10]
வேறு பிறிதென் திருத்தொண்டத்
தொகையால் உலகு விளங்கவரும்
பேறு தனக்குக் காரணராம்
பிரானார் விறன்மிண் டரின்பெருமை
கூறும் அளவெம் அளவிற்றே
அவர்தாள் சென்னி மேற்கொண்டே
ஆறை வணிகர் அமர்நீதி
அன்பர் திருத்தொண் டறைகுவாம்.
[11]

Back to Top
சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
12.070   அமர் நீதி நாயனார்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சீரின் நீடிய செம்பியர் பொன்னிநன் னாட்டுக்
காரின் நீடிய களியளி மலர்ப்பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதிபழை யாறை.
[1]
மன்னு மப்பதி வணிகர்தங் குலத்தினில் வந்தார்
பொன்னு முத்துநன் மணிகளும் பூந்துகில் முதலா
எந்நி லத்தினும் உள்ளன வருவளத் தியல்பால்
அந்நி லைக்கண்மிக் கவர்அமர் நீதியார் என்பார்.
[2]
சிந்தை செய்வது சிவன்கழல் அல்லதொன் றில்லார்
அந்தி வண்ணர்தம் அடியவர்க் கமுதுசெய் வித்துக்
கந்தை கீளுடை கோவணங் கருத்தறிந் துதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும்பயன் கொள் வார்.
[3]
முக்கண் நக்கராம் முதல்வனா ரவர்திரு நல்லூர்
மிக்க சீர்வளர் திருவிழா விருப்புடன் வணங்கித்
தக்க அன்பர்கள் அமுதுசெய் திருமடஞ் சமைத்தார்
தொக்க சுற்றமுந் தாமும்வந் தணைந்தனர் தூயோர்.
[4]
மருவும் அன்பொடு வணங்கினர் மணிகண்டர் நல்லூர்த்
திருவி ழாவணி சேவித்துத் திருமடத் தடியார்
பெருகும் இன்பமோ டமுதுசெய் திடஅருள் பேணி
உருகு சிந்தையின் மகிழ்ந்துறை நாளிடை ஒருநாள்.
[5]
பிறைத்த ளிர்ச்சடைப் பெருந்தகைப் பெருந்திரு நல்லூர்க்
கறைக்க ளத்திறை கோவணப் பெருமைமுன் காட்டி
நிறைத்த அன்புடைத் தொண்டர்க்கு நீடருள் கொடுப்பான்
மறைக்கு லத்தொரு பிரமசா ரியின்வடி வாகி.
[6]
செய்ய ஒண்சடை கரந்ததோர் திருமுடிச் சிகையும்
சைவ வெண்திரு நீற்றுமுண் டகத்தொளித் தழைப்பும்
மெய்யின் வெண்புரி நூலுடன் விளங்குமான் தோலும்
கையின் மன்னிய பவித்திர மரகதக் கதிரும்.
[7]
முஞ்சி நாணுற முடிந்தது சாத்திய அரையில்
தஞ்ச மாமறைக் கோவண ஆடையின் அசைவும்
வஞ்ச வல்வினைக் கறுப்பறு மனத்தடி யார்கள்
நெஞ்சில் நீங்கிடா அடிமலர் நீள்நிலம் பொலிய.
[8]
கண்ட வர்க்குறு காதலின் மனங்கரைந் துருகத்
தொண்டர் அன்பெனுந் தூநெறி வெளிப்படுப் பாராய்த்
தண்டின் மீதிரு கோவண நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்தமர் நீதியார் திருமடங் குறுக.
[9]
வடிவு காண்டலும் மனத்தினும் முகம்மிக மலர்ந்து
கடிது வந்தெதிர் வணங்கிஇம் மடத்தினிற் காணும்
படியி லாதநீ ரணையமுன் பயில்தவ மென்னோ
அடிய னேன்செய்த தென்றனர் அமர்நீதி யன்பர்.
[10]
பேணும் அன்பரை நோக்கிநீர் பெருகிய அடியார்க்
கூணும் மேன்மையில் ஊட்டிநற் கந்தைகீ ளுடைகள்
யாணர் வெண்கிழிக் கோவணம் ஈதல்கேட் டும்மைக்
காண வந்தனம் என்றனன் கண்ணுதற் கரந்தோன்.
[11]
என்று தம்பிரா னருள்செய இத்திரு மடத்தே
நன்று நான்மறை நற்றவர் அமுதுசெய் தருளத்
துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால்
இன்று நீருமிங் கமுதுசெய் தருளுமென் றிறைஞ்ச.
[12]
வணங்கும் அன்பரை நோக்கிஅம் மறையவர் இசைந்தே
அணங்கு நீர்ப்பொன்னி ஆடிநான் வரமழை வரினும்
உணங்கு கோவணம் வைத்துநீர் தாருமென் றொருவெண்
குணங்கொள் கோவணந் தண்டினில் அவிழ்த்தது கொடுப்பார்.
[13]
ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவா றுமக்கே
ஈங்கு நான்சொல்ல வேண்டுவ தில்லைநீ ரிதனை
வாங்கி நான்வரு மளவும்உம் மிடத்திக ழாதே
ஆங்கு வைத்துநீர் தாரும்என் றவர்கையிற் கொடுத்தார்.
[14]
கொடுத்த கோவணம் கைக்கொண்டு கோதிலா அன்பர்
கடுப்பில் இங்கெழுந் தருளும்நீர் குளித்தெனக் கங்கை
மடுத்த தும்பிய வளர்சடை மறைத்தஅம் மறையோர்
அடுத்த தெண்டிரைப் பொன்னிநீ ராடுதற்கு அகன்றார்.
[15]
தந்த கோவணம் வாங்கிய தனிப்பெருந் தொண்டர்
முந்தை அந்தணர் மொழிகொண்டு முன்புதாம் கொடுக்கும்
கந்தை கீளுடை கோவண மன்றியோர் காப்புச்
சிந்தை செய்துவே றிடத்தொரு சேமத்தின் வைத்தார்.
[16]
போன வேதியர் வைத்தகோ வணத்தினைப் போக்கிப்
பான லந்துறைப் பொன்னிநீர் படிந்துவந் தாரோ
தூந றுஞ்சடைக் கங்கைநீர் தோய்ந்துவந் தாரோ
வான நீர்மழை பொழிந்திட நனைந்துவந் தணைந்தார்.
[17]
கதிரி ளம்பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதின்
முதிரும் அன்புடைத் தொண்டர்தாம் முறைமையின் முன்னே
அதிக நன்மையின் அறுசுவைத் திருவமு தாக்கி
எதிரெ ழுந்துசென் றிறைஞ்சிட நிறைந்தநூன் மார்பர்.
[18]
தொண்டர் அன்பெனுந் தூயநீ ராடுதல் வேண்டி
மண்டு தண்புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேலதும் ஈரம்நான் தந்தகோ வணத்தைக்
கொண்டு வாரும்என் றுரைத்தனர் கோவணக் கள்வர்.
[19]
ஐயர் கைதவம் அறிவுறா தவர்கடி தணுகி
எய்தி நோக்குறக் கோவணம் இருந்தவே றிடத்தின்
மையில் சிந்தையர் கண்டிலர் வைத்தகோ வணமுன்
செய்த தென்னென்று திகைத்தனர் தேடுவா ரானார்.
[20]
பொங்கு வெண்கிழிக் கோவணம் போயின நெறிமேல்
சங்கை யின்றியே தப்பின தென்றுதஞ் சரக்கில்
எங்கும் நாடியும் கண்டிலர் என்செய்வார் நின்றார்
அங்கண் வேதியர் பெருந்தொடக் கினில்அகப் பட்டார்.
[21]
மனைவி யாரொடு மன்னிய கிளைஞரும் தாமும்
இனைய தொன்றுவந் தெய்திய தெனஇடர் கூர்ந்து
நினைவ தொன்றிலர் வருந்தினர் நிற்கவு மாட்டார்
புனைய வேறொரு கோவணங் கொடுபுறப் பட்டார்.
[22]
அத்தர் முன்புசென் றடிகள்நீர் தந்தகோ வணத்தை
வைத்தி டத்துநான் கண்டிலேன் மற்றுமோ ரிடத்தில்
உய்த்தொ ளித்தனர் இல்லைஅஃ தொழிந்தவா றறியேன்
இத்த கைத்தவே றதிசயங் கண்டிலே னென்று.
[23]
வேறு நல்லதோர் கோவணம் விரும்பிமுன் கொணர்ந்தேன்
கீறு கோவண மன்றுநெய் தமைத்தது கிளர்கொள்
நீறு சாத்திய நெற்றியீர் மற்றது களைந்து
மாறு சாத்தியென் பிழைபொறுப் பீரென வணங்க.
[24]
நின்ற வேதியர் வெகுண்டமர் நீதியார் நிலைமை
நன்று சாலவும் நாளிடை கழிந்ததும் அன்றால்
இன்று நான்வைத்த கோவணங் கொண்டதற் கெதிர்வே
றொன்று கொள்கென உரைப்பதே நீரென உரையா.
[25]
நல்ல கோவணங் கொடுப்பன்என் றுலகின்மேல் நாளும்
சொல்லு வித்ததென் கோவணங் கொள்வது துணிந்தோ
ஒல்லை ஈங்குறு வாணிபம் அழகிதே உமக்கென்
றெல்லை யில்லவ னெரிதுள்ளி னாலென வெகுண்டான்.
[26]
மறிக ரந்துதண் டேந்திய மறையவர் வெகுளப்
பொறிக லங்கிய உணர்வின ராய்முகம் புலர்ந்து
சிறிய என்பெரும் பிழைபொறுத் தருள்செய்வீர் அடியேன்
அறிய வந்ததொன் றன்றென அடிபணிந் தயர்வார்.
[27]
செயத்த கும்பணி செய்வன்இக் கோவண மன்றி
நயத்த குந்தன நல்லபட் டாடைகள் மணிகள்
உயர்த்த கோடிகொண் டருளும்என் றுடம்பினி லடங்காப்
பயத்தொ டுங்குலைந் தடிமிசைப் பலமுறை பணிந்தார்.

[28]
பணியும் அன்பரை நோக்கிஅப் பரம்பொரு ளானார்
தணியும் உள்ளத்த ராயினர் போன்றுநீர் தந்த
மணியும் பொன்னும்நல் லாடையும் மற்றுமென் செய்ய
அணியுங் கோவணம் நேர்தர அமையும்என் றருள.
[29]
மலர்ந்த சிந்தைய ராகிய வணிகரே றனையார்
அலர்ந்த வெண்ணிறக் கோவணம் அதற்குநே ராக
இலங்கு பூந்துகில் கொள்வதற் கிசைந்தருள்செய்யீர்
நலங்கொள் கோவணந் தரும்பரி சியாதென நம்பர்.
[30]
உடுத்த கோவண மொழியநாம் உங்கையில் தரநீர்
கெடுத்த தாகமுன் சொல்லும்அக் கிழித்தகோ வணநேர்
அடுத்த கோவண மிதுவென்று தண்டினில் அவிழா
எடுத்து மற்றிதன் எடையிடுங் கோவண மென்றார்.
[31]
நன்று சாலவென் றன்பரும் ஒருதுலை நாட்டக்
குன்ற வில்லியார் கோவணம் ஒருதட்டில் இட்டார்
நின்ற தொண்டருங் கையினி னெய்தகோ வணந்தட்
டொன்றி லேயிட நிறைநிலா தொழிந்தமை கண்டார்.

[32]
நாடு மன்பொடு நாயன்மார்க் களிக்கமுன் வைத்த
நீடு கோவண மடையநே ராகவொன் றொன்றாக்
கோடு தட்டின்மீ திடஇடக் கொண்டெழுந் ததுகண்
டாடு சேவடிக் கடியரு மற்புத மெய்தி.
[33]
உலகில் இல்லதோர் மாயையிக் கோவண மொன்றுக்
கலகில் கோவணம் ஒத்தில வென்றதி சயித்துப்
பலவும் மென்துகில் பட்டுடன் இடஇட உயர
இலகு பூந்துகிற் பொதிகளை யெடுத்துமே லிட்டார்.
[34]
முட்டில் அன்பர்தம் அன்பிடுந் தட்டுக்கு முதல்வர்
மட்டு நின்றதட் டருளொடுந் தாழ்வுறும் வழக்கால்
பட்டொ டுந்துகி லநேககோ டிகளிடும் பத்தர்
தட்டு மேற்படத் தாழ்ந்தது கோவணத் தட்டு.
[35]
ஆன தன்மைகண் டடியவர் அஞ்சியந் தணர்முன்
தூந றும்துகில் வருக்கநூல் வருக்கமே முதலா
மான மில்லன குவிக்கவும் தட்டின்மட் டிதுவால்
ஏனை யென்தனம் இடப்பெற வேண்டுமென் றிறைஞ்ச.
[36]
மங்கை பாகராம் மறையவர் மற்றதற் கிசைந்தே
இங்கு நாமினி வேறொன்று சொல்லுவ தென்கொல்
அங்கு மற்றுங்கள் தனங்களி னாகிலும் இடுவீர்
எங்கள் கோவண நேர்நிற்க வேண்டுவ தென்றார்.
[37]
நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவமணித் திரளும்
பல்வ கைத்திறத் துலோகமும் புணர்ச்சிகள் பலவும்
எல்லை யில்தனம் சுமந்தவர் இடஇடக் கொண்டே
மல்கு தட்டுமீ தெழுந்தது வியந்தனர் மண்ணோர்.
[38]
தவநி றைந்தநான் மறைப்பொருள் நூல்களாற் சமைந்த
சிவன்வி ரும்பிய கோவண மிடுஞ்செழுந் தட்டுக்
கவனி மேலமர் நீதியார் தனமெலா மன்றிப்
புவனம் யாவையும் நேர்நிலா என்பது புகழோ.
[39]
நிலைமை மற்றது நோக்கிய நிகரிலார் நேர்நின்
றுலைவில் பல்தனம் ஒன்றொழி யாமைஉய்த் தொழிந்தேன்
தலைவ யானுமென் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையி லேறிடப் பெறுவதுன் னருளெனத் தொழுதார்.
[40]
பொச்ச மில்லடி மைத்திறம் புரிந்தவ ரெதிர்நின்
றச்ச முன்புற உரைத்தலும் அங்கண ரருளால்
நிச்ச யித்தவர் நிலையினைத் துலையெனுஞ் சலத்தால்
இச்ச ழக்கினின் றேற்றுவார் ஏறுதற் கிசைந்தார்.
[41]
மனம கிழ்ந்தவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கிப்
புனைம லர்க்குழல் மனைவியார் தம்மொடு புதல்வன்
தனைஇ டக்கொடு தனித்துலை வலங்கொண்டு தகவால்
இனைய செய்கையி லேறுவார் கூறுவா ரெடுத்து.
[42]
இழைத்த அன்பினில் இறைதிரு நீற்றுமெய் யடிமை
பிழைத்தி லோமெனிற் பெருந்துலை நேர்நிற்க வென்று
மழைத்த டம்பொழில் திருநல்லூர் இறைவரை வணங்கித்
தழைத்த அஞ்செழுத் தோதினார் ஏறினார் தட்டில்.
[43]
மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்துடன் ஏற
அண்டர் தம்பிரான் திருஅரைக் கோவண மதுவும்
கொண்ட அன்பினிற் குறைபடா அடியவர் அடிமைத்
தொண்டும் ஒத்தலால் ஒத்துநேர் நின்றதத் துலைதான்.
[44]
மதிவி ளங்கிய தொண்டர்தம் பெருமையை மண்ணோர்
துதிசெய் தெங்கணும் அதிசய முறவெதிர் தொழுதார்
கதிர்வி சும்பிடைக் கரந்திட நிரந்தகற் பகத்தின்
புதிய பூமழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார்.
[45]
அண்டர் பூமழை பொழியமற் றதனிடை ஒளித்த
முண்ட வேதிய ரொருவழி யான்முதல் நல்லூர்ப்
பண்டு தாம்பயில் கோலமே விசும்பினிற் பாகம்
கொண்ட பேதையுந் தாமுமாய்க் காட்சிமுன் கொடுத்தார்.
[46]
தொழுது போற்றிஅத் துலைமிசை நின்றுநேர் துதிக்கும்
வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும்
முழுதும் இன்னருள் பெற்றுத்தம் முன்தொழு திருக்கும்
அழிவில் வான்பதங் கொடுத்தெழுந் தருளினார் ஐயர்.
[47]
நாதர் தந்திரு வருளினால் நற்பெருந் துலையே
மீது கொண்டெழு விமானம தாகிமேற் செல்லக்
கோதி லன்பரும் குடும்பமும் குறைவறக் கொடுத்த
ஆதி மூர்த்தியா ருடன்சிவ புரியினை யணைந்தார்.
[48]
மலர்மிசை அயனு மாலுங் காணுதற் கரிய வள்ளல்
பலர்புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவணப் பழைமைகாட்டி
உலகுய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம்உன்னித்
தலைமிசை வைத்து வாழுந் தலைமைநந் தலைமை யாகும்.
[49]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool